Sunday 10 March 2024

யா ரஹ்மானே - துஆ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

யா ரஹ்மானே, எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரிகள், உற்றார் உறவினர்கள், உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களது உறவுகளை கொண்டோ, செல்வத்தை கொண்டோ, எங்களை சோதித்து விடாதே!

யா ரஹ்மானே, பொய், புறம், கோபம், பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களது சொல்லாலோ, செயலாலோ, பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால் அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக!

யா ரஹ்மானே, நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ, மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதோ, பெரிதோ, எப்பேற்பட்ட பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து, மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, ரமலான் உடைய அருட் கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்கு நிறைவாக தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!

யா ரஹ்மானே, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, எங்களது உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஹலாலானவையாக தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக!

யா ரஹ்மானே, நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களின் தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை நீயே பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும், இயற்கை சீரழிவிலிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராத மரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக!

யா ரஹ்மானே, முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, எம் பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, இஸ்லாமிய சட்டத்தை எல்லாத்துறைகளிலும் மேலோங்க செய்து அதன்படி முழுமையான வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, முழுமையான பர்தா முறையில் எங்கள் பெண்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, உள்ளங்களை புரட்டக் கூடியவனே எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக, கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து எங்களை தனிமைப்படுத்தி விடாதே!

யா ரஹ்மானே, மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளை தோற்கடிப்பாயாக

யா ரஹ்மானே, எங்களை உனது நெருக்கமானவர்களாகவும், உனது பிரியமானவர்களாகவும் மாற்றுவாயாக!

யா ரஹ்மானே, உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!

யா ரஹ்மானே, தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, மரண வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

யா ரஹ்மானே, கியாமத் நாளின் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, கியாமத் நாளின் இழிவுகளை விட்டும் மூமீனான ஆண்கள், பெண்கள் அனைவர்களையும் பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!

யா ரஹ்மானே, கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, மறுமையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுல் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!

யா ரஹ்மானே, எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!

யா ரஹ்மானே, ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!

யா ரஹ்மானே, மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக!

யா ரஹ்மானே, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!

யா ரஹ்மானே, உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத் வழங்குவாயாக!

யா ரஹ்மானே, யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை உன்னுடைய அருளைக் கொண்டு கபூல் செய்வாயாக! ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

துஆவில் எங்களின் நலன்களுக்கும். துஆச் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்!!🤲🏻

No comments:

Post a Comment