Monday 11 March 2024

புனித ரமலான் மாதத்தை அலட்சியமாக இருந்து கடந்து விட வேண்டாம்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

புனித ரமலான் மாதத்தை அலட்சியமாக இருந்து கடந்து விட வேண்டாம்...

எனதருமைச் சொந்தங்களே... 
நண்பர்களே... 
இஸ்லாமிய சமுதாய உறவுகளே... 

இது வரையிலும் எத்தனையோ வருடங்களில் மகத்துவம் மிக்க ரமலான் நம்மை விட்டு கடந்து சென்றிருக்கின்றது. 
சென்ற ரமலான்களில் நம்மோடு இருந்தவர்கள், பயணித்தவர்கள் இந்த ரமலானில் இந்த உலகத்தையே விட்டு பிரிந்தும் கூட இருக்கின்றார்கள்,
இப்போது பலர் நம்முடன் இல்லை. 

இந்த ரமலானில் இருக்கின்ற நாம் அடுத்த ரமலானில் இருப்போமா ??? 
என்பதும் தெரியாது. 

அல்லாஹ்வே அறிவான்.

ஆகவே இந்த புனித ரமலானை அடைந்திருக்கின்ற நாம்...... 
மிகுந்த ஆர்வத்துடன், ரமலானில் முறையான நேரப்படி  வணக்க-வழிபாடுகளை அமைத்துக் கொண்டு, ரமலானை பயனுள்ளதாக கழிக்க தயாராகுவோம்.

உள்ளப்பூர்வமாக உண்மையான இறையச்சத்துடன் இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி பசித்திருந்து... 
விழித்திருந்து...
அழுது, தொழுது... 
எல்லாம் வல்ல இறைவனிடம் சரணடைவோம். 

கடமையாக்கப்பட்ட 
"பர்ளான தொழுகைகள்" 
மற்ற பல கட்டாய கடமைகளை தவறாமல் நிறைவேற்றுவோம்.

முக்கியமாக ரமலான் மாத இரவு நேரங்களில்களில்...
தொலைக்காட்சி, கைபேசி போன்றவற்றில்...!!! 
நோன்பு கால விஷேச  நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டு இரவுத் தொழுகையில் அதிகமதிகம் ஈடுபட்டு வல்ல ரஹ்மானுடன் தொடர்பை அதிகப்படுத்தி அழுது, தொழுது துஆக்கள் செய்வோம்.

குறிப்பாக...
காலமெல்லாம் கஷ்டப்படும் ஃபலஸ்தீன் மக்கள் வெற்றி பெறவும்...
உலகம் முழுவதிலும் நம் சமுதாய மக்கள் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழவும்...

பாசிச சக்திகளின் தேர்தல் நேர யுக்திகளான...!!! 
மக்களைப் பிரித்து சண்டை-சச்சரவுகளை ஏற்படுத்துவது, 
செய்த தவறுகளை மறைப்பதற்காக!!! 
சிறுபான்மை மக்களுக்கு எதிராக CAA போன்ற கொடூர சட்டங்களை அவசர அவசரமாக அறிவிப்புகள் செய்வது!!!
அதிகாரிகள் மூலமாக அத்துமீறி நடந்து கொள்வது!!!

போன்ற விஷயங்களில் இருந்து பாதுகாப்பு பெற...
நம் நாட்டில் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்போடு வாழக்கூடிய வகையில் இறைவனுக்கு பயந்த, மக்கள் விரும்பக்கூடிய வகையில் நல்ல ஆட்சியாளர்கள் அமைவதற்காகவும்...

எல்லாம் வல்ல இறைவனிடம் அதிகமதிகமாக துஆக்கள் செய்வோம். 

ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் தூக்கத்தை துறந்து, ஓய்வெடுப்பதை எல்லாம் குறைத்துக்கொண்டு 
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த  (லைலத்துல் கத்ர்) இரவின் நன்மைகளை தேடப் பாடுபடவோம். 

வசதி-வாய்ப்புகள் உள்ளவர்கள் ரமலானில் வழியுறுத்தப்பட்ட "இஃதிகாப்" பையும் கடைபிடிக்க முயற்சிகள் செய்வோம். 

அதிகமதிகம் "தான-தர்மம்" செய்து இறைப்பொருத்தத்தை பெறுவோம்.

பொய்யான... 
அருவருக்கத்தக்க... 
பிறர் மனம் வருந்தக்கூடிய... 
மனவருத்ததில் பிரிவினைகள் ஏற்படுத்தக்கூடிய வகையிலான செயல்களிலிருந்தும், (புறம்-அவதூறு) பேச்சுக்களிலிருந்தும்  கட்டாயம் தவிர்த்துக்கொள்வோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.

புகாரி 1903

இந்தச் செய்தியை உள்ளத்தில் ஆழப்பதிய வைத்தவர்களாக, தேவையில்லாத காரியங்களில் ஈடுபட்டு, ரமலான் மாதத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்தி விடாமல்... 

ஒவ்வொரு முஸ்லிமும் இந்த வருட ரமலான் மாதத்தை,  நல்ல ஒரு மனமாற்றத்தோடு கடந்து 
இனி வரக்கூடிய 11 மாதங்களுக்கும் முன்மாதிரியாக, படிப்பினையாகவும் ஆக்கிக்கொள்வோம்.
வளரும் தலைமுறைக்கு நல்ல வழிகளை அமைத்து தர முழு முயற்சிகள் செய்வோம். 

இன்ஷா அல்லாஹ். 

இதன் தொடர்ச்சியாக திருக்குர்ஆனில் அல்லாஹ் கற்றுத்தந்த துஆக்களையும் தொடந்து காண்போம்.

எல்லாம் வல்ல இறைவன் நாடினால். 


அல்லாஹ் போதுமானவன்.

No comments:

Post a Comment