Friday 28 December 2018

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஹம்மது நபியவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தவரல்லர். வரலாறுகள் எழுதப்படுகிற காலத்தில் வாழ்ந்தவர். முஹம்மது நபியவர்கள் வாழ்ந்த காலம், அவர்களது பிரச்சாரம், சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் இவ்வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக் கணக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறினார்கள். எனவே நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து குர்ஆனுடைய காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்பூல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றைக்கும் காட்சிக்குக் கிடைக்கின்றன.
திருக்குர்ஆனை சில வருடங்களுக்கு முன்னால் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

சித்தப்பா மகளைத் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சித்தப்பா மகளைத் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?


நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் குறைபாடுள்ள குழைந்தகளாகப் பிறக்கும் என்று மூடத்தனமான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு சில மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர்கள் வாதங்களை வைக்கின்றனர். ஆனால் பலகாரணங்களால் இது தவறாகும்.
நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ள குழைந்தைகளாகப் பிறக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. மாறாக குறைபாடுடன் பிறக்கும் சில குழந்தையின் பெற்றோர்கள் தங்களுக்கு மத்தியில் நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம் செய்துள்ளதைக் காணும் மருத்துவர்களில் சிலர் இவ்வாறு தங்களது சொந்தக் கருத்தைக் கூறி வருகின்றனர்.
இவ்வாறு கூறுவதாக இருந்தால் அன்னியத்திலும், தூரத்து உறவு முறைகளிலும் திருமணம் முடித்த பலரது குழந்தைகள் குறைபாடு உடையனவாக உள்ளதே அதற்கு அவர்கள் என்ன பதில் அளிக்கப் போகின்றார்கள்?
இதிலிருந்தே இவர்கள் தங்களது சுய கருத்தைத்தான் இதில் புகுத்தியுள்ளனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடிப்பதற்கும், குழந்தைகள் குறைபாடுள்ள குழைந்தகளாக பிறப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வாறு நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடிப்பதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அலி (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அலி (ரலி) அவர்கள் நபிகளாரின் தந்தை அப்துல்லாஹ்வின் உடன் பிறந்த அபுதாலிபின் மகன். இவ்வளவு நெருங்கிய உறவுமுறையில் நபிகளார் தனது மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார்கள். இது கூடாது என்றாலோ அல்லது இதனால் பெரும் கேடு ஏற்படும் என்றாலோ அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் இதற்குத் தடைவிதித்திருப்பார்கள்.
எனவே மார்க்க அடிப்படையிலும் இது தவறல்ல என்பதயும் இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
யார் யாரையெல்லாம் மணம் முடிக்கக் கூடாது; யார் யாரெல்லாம் மணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்ற பட்டியலை அல்லாஹ் தனது திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:23,24
அல்லாஹ் தடுத்த உறவுகளைத் தவிர மற்ற உறவுகளில் மணமுடிப்பதை யாரும் தடுக்க முடியாது. பொய்யான பொருந்தாத காரணங்களைக் கூறி அல்லாஹ் அனுமதித்ததைத் தடுப்பது பெரும் தவறாகும்.