Friday 8 November 2019

மஸ்ஜிதுகளை மீட்டெடுப்போம்

*✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி*

*மதநல்லிணக்கத்தை போதிக்கும் மஸ்ஜிதுகள்*

*இஸ்லாமிய வளர்ச்சியை தடுப்பதற்காக யூதர்கள் திட்டமிட்டு மஸ்ஜிதுல் அக்ஸாவை கைப்பற்றினார்கள்.*

*இந்தியாவில் இந்து முஸ்லிம்களின் இணைக்கத்தை குழைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர்களால் பல்வேறு முயற்சிகள் நடத்தப்பட்டது.*

*பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலமாக ஆட்சியை தக்கவைக்கலாம் என்பது ஆங்கிலேயர்களின் திட்டம்.*

*பாபர் மசூதி இடிப்பும் அத்திட்டத்தின் அம்சமே ஆகும்.*

*அதே பிரித்தாளும் சூழ்ச்சியைத்தான் இன்றைய ஆட்சியாளர்களும் மேற்கொள்கிறார்கள்.*

*இருசாரரை மோதவிடுவதின் மூலம் குளிர்காய வேண்டுமென்பது அவர்களின் திட்டம்.*

*பள்ளிவாசலை காரணமாக வைத்து மதநல்லிணக்கத்தை தகர்க்க இன்றைய ஆட்சியாளர்கள் சூழ்ச்சி செய்கின்றனர்.*

*ஆனால் உண்மையில் பள்ளிவாசல்கள்தான் மதநல்லிணக்கத்தின் அடையாளமாக நபியவர்கள் காலம் முதல் இன்றுவரை உள்ளது.*

*ஆபத்து என்று வரும் பொழுது மனிதநேய அடிப்படையில் மாற்று சமூகத்தாரை முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளில் தங்க வைக்கின்றனர்.*

*மாற்றார்கள் ஓதிப்பார்ப்பதற்காக இன்றளவும் மஸ்ஜிதை நாடி வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.*

*இன்று அமெரிக்கா, பிரித்தானியா முதலான மேற்குலக நாடுகளிலும் பஹ்ரைன் போன்ற சில மத்திய கிழக்கு நாடுகளிலும் முஸ்லிம் அல்லாதாருக்கான தஃவாவை முன்வைப்பதில் சில மஸ்ஜிதுகள் முன்னணியில் நின்று இயங்கி வருகின்றன.*

*மஸ்ஜிதை பார்வையிட வருபவர்களை வரவேற்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் தேவையான விளக்கங்களை வழங்கவும் இப்பள்ளிவாசல்களில் விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாம் பற்றிய நூல்களையும் பிரசுரங்கங்களையும் பெற்றுக்கொள்வதற்கு இங்கு விஷேச ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக செப்டம்பர் 11 அசம்பாவிதங்களைத் தொடர்ந்து இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உருவான பிழையான கருத்துக்களை போக்குவதிலும் பலரை இஸ்லாத்தின் பால் கவர்வதிலும் இவை பெரும் பணியாற்றி வருகின்றன.*

*முஸ்லிமல்லாதவரை பள்ளிகளில் நுழைய அனுமதிப்பதில் முஸ்லிம்கள் மத்தியில் நீண்ட காலமாகவே ஒருவகை தயக்கம் இருந்து வருகின்றது. ஆனால் அவர்கள் அவ்வாறு பள்ளிவாசல்களை பார்வையிட இஸ்லாத்தில் எவ்வித தடையும் இருப்பதாக தெரியவில்லை. முஸ்லிமல்லாதாரை மஸ்ஜிதுகளில் நுழைய அனுமதிக்கலாம் என்பதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஆதாரமாக கொள்ளப்படுகின்றது.*

*''மேலும் இணைவைத்துக் கொண்டிருப்போரில் எவரேனும் (நபியே) உம்மிடம் அபயம் தேடினால் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக, பின்னர் அவருக்கு அபயமளிக்கும் வேறு இடத்தில் அவரை சேர்த்து வைப்பீராக. ஏனெனில் அவர்கள் அறியாத சமூகத்தவர்களாய் இருக்கின்றனர்.'' (9:6)*

*முஸ்லிம்கள் பனூஹனீபா கோத்திரத்தை சேர்ந்த அடிமை ஒருவரைக் கைதியாக நபியவர்களிடம் கொண்டு வந்த போது அவரை பள்ளிவாயல் தூண் ஒன்றில் மூன்று நாட்களுக்கு கட்டி வைக்குமாறு அன்னார் பணித்தார்கள். அவர் முஸ்லிம்களின் வணக்க முறைகளையும் பண்பாடுகளையும் பார்க்க வேண்டுமென்பதே நபியவர்களின் நோக்கமாக இருந்தது. அக்கைதிக்கு பள்ளியிலேயே உணவு வழங்கப்பட்டது. ஏனைய தேவைகளை நிறைவேற்றவும் ஒழுங்குகள் செய்யப்பட்டன. மூன்று நாட்களின் பின்னர் அவர் அவிழ்த்து விடப்பட்ட போது இஸ்லாத்தினால் கவரப்பட்டிருந்த அவர் ஷஹாதத்தை மொழிந்து இஸ்லாத்தை தழுவினார்.*

*நஜ்ரான் கிறிஸ்த்தவ தூதுக் குழுவை நபியவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் வைத்து வரவேற்றதோடு அங்குதான் அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடாத்தினார்கள். அவர்களது வணக்க நேரம் வந்த போது நபியவர்கள் தனது மஸ்ஜிதிலேயே ஒரு பகுதியை அவர்களுக்கு ஒதுக்கியும் கொடுத்தார்கள்.*

No comments:

Post a Comment