Saturday 2 November 2019

டெங்கு காய்ச்சல் என்பது என்ன?* *டெங்கு எப்படிப் பரவுகிறது

@@# *டெங்கு காய்ச்சல் என்பது என்ன?*
*டெங்கு எப்படிப் பரவுகிறது?*@@


``டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என டெங்குவில் 4 வகைகள் உள்ளன.

டெங்கு எப்படிப் பரவுகிறது?

நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

`ஏடிஸ் ஏஜிப்தி' கொசுக்கள் எப்படி நோயைப் பரப்புகின்றன?

``வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.

எத்தனை நாள்களில் `ஏடிஸ்' கொசு வளர்ச்சியடையும்?

```ஏடிஸ்' கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர 7 முதல் 10 நாள்களாகும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டுவரையிலும் அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நல்ல நீர் தேங்கியிருக்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோயைப் பரப்பும்.

`ஏடிஸ்' கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்?

கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.''

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

`காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.

காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து, `இது டெங்கு காய்ச்சலா' அல்லது `பிற காய்ச்சலா' என்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.

டெங்கு காய்ச்சலை கண்டறிய என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?

``ஆரம்ப அறிகுறிகள் அனைத்தும் வைரஸ் காய்ச்சல்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால் உடனே நோயை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2 அல்லது 3 நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ளவேண்டும்.";

டெங்குவுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது?

``டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் (Paracetomol) மாத்திரையும், உடல் வலியைப் போக்க உதவும் மாத்திரைகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே `அதிர்ச்சி நிலை' (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலைப் பாதுகாப்புக்குள் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம்.

வீட்டிலேயே டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?

டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதாவது, தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்தத் தருணத்தில் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. எனவே மருத்துவக் கண்காணிப்பிலிருந்து, உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலை ஏற்படாமல் காப்பாற்ற முடியும். சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்ட ஒருவருக்கு மீண்டும் வருமா?

நிச்சயமாக வரலாம். ஆனால், ஏற்கெனவே வந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் வராது. டெங்குவில் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என 4 வகை வைரஸ்கள் உள்ளன.

மீண்டும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் என்னென்ன?

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்டவரை `ஏடிஸ்' கொசு கடித்தால் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது முறை வரும் டெங்கு முன்பு வந்ததைவிடத் தீவிரமாக இருக்கும்.

டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் மீண்டும் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்க என்ன செய்யலாம்?

டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் தொடர்ந்து 3 முதல் 5 நாள்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டும். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யலாம். மீண்டும் டெங்கு தொற்றுள்ள கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை?

காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ளவேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment