Wednesday 5 February 2014

(தலை)விதி - Al Buhary

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

6594. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்மாக மாறிவிடுகிறது.
பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், (செயல்பாடு), அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான் அல்லாஹ்வின் மீதாணையாக! 'உங்களில் ஒருவர்', அல்லது 'ஒருவர்' நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே 'விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு' அல்லது 'ஒரு முழம்' இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.
(இதைப் போன்றே) ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே 'ஒரு முழம்' அல்லது 'இரண்டு முழங்கள்' இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.2
ஆதம் இப்னு அபீ இயாஸ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (ஒரு முழமா இரண்டு முழங்களா? என்பதில் சந்தேகம் இல்லாமல்) ஒரு முழம் என்றே (தீர்மானமாக) இடம் பெற்றுள்ளது.
Volume :7 Book :83
6595. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், (தாயின்) கருவறையில் ஒரு வானவரை நியமிக்கிறான். அவர், 'இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! (இது பற்றித் தொங்கும்) கருக்கட்டி இறைவா! (இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு' என்று கூறிக் கொண்டிருப்பார். அதன் படைப்பை முழுமையாக்கிட அல்லாஹ் விரும்பும்போது 'இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? அல்லது நற்பாக்கியம் பெற்றதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? ஆயுள் எவ்வளவு?' என்று வானவர் கேட்பார். அவ்வாறே இவையனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டு,) அது தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே எழுதப்படும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.3
Volume :7 Book :83
6596. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம் (தெரியும்)' என்றார்கள்.
அவர் 'அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஒவ்வொருவரும் 'எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது 'எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்' என்று பதிலளித்தார்கள்.6
Volume :7 Book :83
6597. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், 'அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்' என்று பதிலளித்தார்கள்.8
Volume :7 Book :83
6598. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்' என்று விடையளித்தார்கள்.9
Volume :7 Book :83
6599. & 6600. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை (இயற்கை மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர். ஒரு விலங்கு (முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப்) பெற்றெடுப்பதைப் போன்றுதான் (இது). நீங்களே அதன் நாக்கு, மூக்கு போன்ற உறுப்புகளை வெட்டிச் சேதப்படுத்தாத வரை நாக்கு மற்றும் மூக்கு வெட்டப்பட்ட நிலையில் அது பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறனார்கள்.10
Volume :7 Book :83
6601. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு பெண், மற்றொரு பெண்ணின் பாத்தி(ரம் எனும் வாழ்வாதா)ரத்தைக் காலி செய்(துவிட்டு, அதைத் தன்னுடையாக்கிக்கொள்)வதற்காக அவளை மணவிலக்குச் செய்திடுமாறு (தன் மணாளரிடம்) கோர வேண்டாம். (மாறாக, அந்த நிபந்தனையின்றி) அவள் மணம் புரிந்துகொள்ளட்டும். ஏனெனில், அவளுக்கென விதிக்கப்பட்டது அவளுக்கே கிடைக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 11
Volume :7 Book :83
6602. உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் புதல்வியார் ஒருவரின் தூதுவர் நபி அவர்களிடம் வந்தார். அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி), உபை இப்னு கஅப்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி) ஆகியோர் நபி அவர்களுடன் இருந்தனர். அந்தப் புதல்வியாரின் மகன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதாகத் தூதுவர் தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்ப்பாயாக' என்று தம் புதல்விக்குச் சொல்லி அனுப்பினார்கள்.12
Volume :7 Book :83
6603. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள். 13
Volume :7 Book :83
6604. ஹுதைபா அல்யமான்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) எங்களிடையே நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.
Volume :7 Book :83
6605. அலீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் 'சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருபபிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்றார்கள்.
அப்போது மக்களில் ஒருவர் 'அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள் 'இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு பிறகு '(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்' எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். 14
Volume :7 Book :83
6606. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி 'இவர் நரகவாசிகளில் ஒருவர்' என்று கூறினார்கள்.
போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து 'அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார்' என்று கூறினார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் 'அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம்' என்றே கூறினார்கள்.
அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்குப் போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தம் கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதா தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராம்விட்டார்)' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பிலாலே! எழுந்து சென்று 'இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகிறான்' என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள்' என்று கூறினார்கள். 15
Volume :7 Book :83
6607. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் பங்கெடுத்த (கைபர்) போரில், எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்த ஒருவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக்கொள்ளலாம்' என்று கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு குறிப்பட்டார்கள் என்பதை அறிய) மக்களில் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அந்த மனிதரோ இணைவைப்பாளர்களை எதர்த்து எல்லாரையும் விடக் கடுமையாகப் போராடும் அதே நிலையில் இருந்தார். இறுதியில் அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தம் வாளின் கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து (அழுத்தி)க் கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.
(பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்து 'தாங்கள் இறைத்தூதர்தாம் என்று நான் உறுதி கூறுகிறேன்' என்றார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள். அவர் 'தாங்கள் எவரைக் குறித்து நரகவாசிகளில் ஒருவரை பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டீர்களோ அவர் முஸ்லிம்களுக்காகப் போராடுவதில் மகத்தான (பங்காற்றுப)வராகத் திகழ்ந்தார். (தாங்கள் அவரைப் பற்றி நரகவாசி என்று குறிப்பிட்டிருப்பதால்) அவர் இதே (தியாக) நிலையில் இறக்கப்போவதில்லை என்று நான் அறிந்தேன். அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டபோது அவரசமாக இறந்துவிட விரும்பி தற்கொலை செய்தார்' என்றார். அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஓர் அடியார் நரகவாசிகளின் செயல்களைச் செய்துவருவார். ஆனால, (இறுதியில்) அவர் சொர்க்கவாசகளில் ஒருவராம்விடுவார். இன்னொருவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துவருவார். ஆனால், (இறுதியில்) அவர் நரகவாசிகளில் ஒருவராம்விடுவார். இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.16
Volume :7 Book :83
6608. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)' என்றார்கள்.18
Volume :7 Book :83
6609. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :84
6610. அபூ மூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் ஒரு போரில் (கைபரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும்போதும் ஒரு கணவாயில் இறங்கும்போதும் உரத்த குரலில் 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறலானோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் அருகில் வந்து 'மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மென்மையாக மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனையும் (எல்லாரையும்) பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்' என்று கூறிவிட்டு, (என்னைப் பார்த்து) 'அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் கருவூலங்களிலுள்ள ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? (அது) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்தான் என்றார்கள்.20
Volume :7 Book :84
6611. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :84
6612. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸை விடச் சிறுபாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.22
Volume :7 Book :84
6613. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
'(நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்) காட்சியையும், சபிக்கப்பட்ட மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இந்த மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்' எனும் (திருக்குர்ஆன் 17:60 வது) வசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: இது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) பைத்துல் மக்திஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாருக்குக் காட்டப்பட்ட கண்கூடான காட்சியைக் குறிக்கிறது. குர்ஆனில் சபிக்கப்பட்ட மரம்' என்பது 'சப்பாத்திக் கள்ளி' மரத்தைக் குறிக்கிறது.23
Volume :7 Book :84

No comments:

Post a Comment