Tuesday 7 April 2020

#இப்படியும்_மனித_நேயர்கள் ட்யூட்டிக்குப் போன மனைவி

#இப்படியும்_மனித_நேயர்கள்

ட்யூட்டிக்குப் போன மனைவி இந்த இக்கட்டான சூழ்நிலையில், மருத்துவமனையிலேயே இரவும், பகலும் அங்கேயே தங்க நேரிடுகிறது.

இதை அறிந்திருந்த கணவரும், வீட்டில் கைக் குழந்தையைக் கவனித்துக் கொண்டு ஒத்துழைக்கிறார்.

இது நடப்பது கேரளாவில்..

வழக்கம் போல் கணவர் போனில் மனைவியை தொடர்பு கொள்கிறார்.
இது வழக்கமான உரையாடல் தான், ஆனால் இன்று அதில் ஒரு வித்தியாசத்தை உணர்கிறார், மனைவியின் பேச்சிலிருந்து..
உற்சாகமில்லை. ஒரு சோகம் இழையோடுகிறது.

"என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?" கணவர்.

மனைவி தன்னை கட்டுப்படுத்த முடியாமல தவிக்கிறார், பொங்கி வரும் அழுகையை அடக்கினாலும், உணர்வுகளை அடக்க முடியவில்லை.

மனைவிக்கு எதுவோ ஒன்று நடந்திருக்கிறது என்று உணர ஆரம்பிக்கும்போது, அடிவயிற்றில் சில்லென்ற வலி.. பயத்தால்.

" டீ, என்ன ஆச்சு? ஏன் பேச மாட்டேங்கிறே? ஏதாவது பிரச்சினையா? சொல்லு"

"ஏட்டா, கொரொனா எனக்கும் தொற்றிடுச்சு, இப்ப நான் அடைக்கப்பட்டு இருக்கேன்" கதறி வடிக்கிறார் மனைவி.

பூமி பிளந்து கால் நழுவுகிறது கணவருக்கு.
ஒரு குடும்பத்தின் அச்சாணி மளுக்கென்று முறிந்து, குடை சாய்கிறது.
சாவுக்கு பக்கத்தில் போய்விட்டாளா, இல்லை சாவு இவளுக்கு பக்கத்தில் நெருங்கி வந்துவிட்டதா?
இப்போது கணவர் வெடித்து அழுகிறார்.

ஊரைக் காப்பாற்றப் போனவளுக்கு இப்போது தொற்று,
வைரஸ்க்கு ஏது அந்த வித்தியாசம்?

இப்படி எத்தனையோ தேவதைகள், மருத்துவர் தெய்வங்கள் தெரிந்தும் தங்கள் உயிர், குடும்பம் முழுக்க அடகு வைத்து விட்டுப் போவது, சக மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற தெய்வ சிந்தனைக்கும் மேலான மனிதாபிமானம் ஒன்றே.

'குழந்தை எங்கே, பேசச் சொல்லுங்க?' பெற்ற வயிறு துடிக்கிறது.

மழலை "அம்மே,..."
"சாப்பிட்டியா.?" அம்மா..

*நீ எப்பம்மா வீட்டிற்கு வருவே.?"*

பதில் தெரியாத இளம் தாய் அழுகிறாள், தனது கனவான மருத்துவ தொழிலை, தனது இளம் வயதில் தேர்த்தெடுத்துப் படித்த அந்த தேவதை, இன்று கொடுக்கும் விலை?

இதை கண்ணீரோடு எழுதுகிறேன், ஆனாலும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கைநோடு..

*அம்மா, திரும்ப நல்லபடியா வருவாங்கடா தங்கம்..!!*

வருவார்கள், மீண்டு வருவார்கள், என் தெய்வங்களையும், தேவதைகளையும் கை தட்டி வரவேற்க காத்திருக்கிறேன் உங்களோடு நானும்.👇👆

No comments:

Post a Comment