Monday 15 April 2024

குடும்பச் செலவும் தர்மமே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபிகளாரின் நற்போதனைகள்

குடும்பச் செலவும் தர்மமே!

ஒரு மனிதர் (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி 55, முஸ்லிம் 192

விளக்கம்: தம் குடும்பத்தைக் கவனிப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் தம் குடும்பத்திற்காக உழைத்து, குடும்பத்தினருக்கே செலவு செய்தாலும் அதையும் அல்லாஹ் அவர் செய்த தர்மமாகக் கணக்கிடுகின்றான் குடும்பத்தினருக்கு உழைப்பதும், அவருக்குச் செலவிடுவதும் நன்மையைப் பெற்றுத் தரும் என்ற எண்ணத்திலும், இது படைத்தவனின் கட்டளை என்ற எண்ணத்திலும் அவர் தம் குடும்பத்திற்குச் செய்யும் செலவைக் கூட தர்மமாக அல்லாஹ் பதிவு செய்து மறுமை நாளில் நன்மையைத் தருவான்.

புகாரியின் 2742 அறிவிப்பில், “நீர் (நல்லதில்) எதை செலவு செய்தாலும் அது தர்மமாகும். நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவள உணவும் கூட தர்மமாகும்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி இறை திருப்தியை எதிர்பார்த்து நாம் செய்யும் குடும்பச் செலவும் நன்மையைத் தரும் என்பதை எண்ணி, குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் நியாயமான செலவுகளைச் செய்திட வேண்டும்.

No comments:

Post a Comment