Thursday 10 April 2014

தேர்தலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கட்சிகள் எதிலும் இல்லாத பட்சியாக, எந்த இயக்கத்திலும் மயக்கம் கொள்ளாதவனாக, குழு சாரா குழுவின் குரலாக  மீண்டும் கூற விரும்புவது இது தான்:

1). தி மு க, காங்கிரஸ் உட்பட அரசியலில் எந்தக் கட்சியும் யோக்கியமில்லை.

2). இந்தத் தேர்தல் மிகப் பிரதானமான தேர்தல். கொடுங்கோன்மை மதவெறிக்கும் அதற்கு எதிரான சாமானியர்களுக்குமான தேர்தல்.

3). சிறுபான்மையினர் அனைவரும், மதச்சார்பற்றவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், நியாயம் அறிந்தவர்களும் ஃபாஸிசத்திற்கு எதிராக தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளிக்க வேண்டும்.

4). அதற்கு வழி இந்திய அளவில் காங்கிரஸ் தான்.(வெல்லும் வாய்ப்புள்ளது என்பதால்). 

ஆம் ஆத்மி போன்ற 'நல்ல' கட்சிகளுக்கு அளிக்கும் வாக்கு, வாக்குச் சிதறலுக்கே வழிவகுக்கும். அதனால் ஃபாஸிசமே ஆதாயம் அடையும். ஆகவே 'ஆம் ஆத்மி'க்கு வாக்களிப்பது அறிவுடமை ஆகாது.
5). இந்திய அளவில் காங்கிரஸ்ஸை ஆதரித்தாலும், தமிழகத்தில் காங்கிரஸ்ஸை ஆதரிப்பது - வெல்லும் வாய்ப்பற்றது என்பதால் -  வீண். ஏனெனில் மீண்டும் வாக்குச் சிதறல் ஏற்பட்டு ஃபாஸிசமே  ஆதாயம் பெறும்.

6). ஆகவே, தமிழக அளவில் ஃபாஸிசத்திற்கு மாற்று அணியாக உள்ள திமுக அணிக்கே சிந்தாமல் சிதறாமல் வாக்களிக்க வேண்டும்.

7). திமுக-வும் சந்தர்ப்ப வாதமாக ஃபாஸிச கட்சியை தேர்தலுக்குப் பிறகு  ஆதரித்துவிட்டால்? என்ற சந்தேகம் இரண்டு காரணங்களால் நிவர்த்தியாகிறது.

  7அ). இன்னும் இரண்டு வருடங்களுக்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால், ஃபாஸிசத்தை மத்தியில் ஆதரித்து, அதனால் தமிழக சட்டமன்றத்தை 'கோட்டை'விடும் அரசியல் தவறை திமுக செய்யாது. ஆனால், ஆட்சியைத் தக்கவைக்க அதிமுக-வும் அவ்விதமே நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது.  யாரும் கோராமலே, பாபர் மசூதியை இடிக்க தன் தொண்டர்களை அனுப்பிவைத்த கட்சி அது.

  7ஆ). குறைந்தபட்சம் அப்படி ஒரு சூழல் ஏற்படுகையில், அந்த அணியின் இரு முஸ்லிம் உறுப்பினர்கள் விலகுவதன் மூலம்  ஒரு பின்னடைவை ஏற்படுத்துவர் என்ற கருத்தை அக்கட்சி யோசிக்கும்.

8). திமுக-வின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் என்றிருந்தால், அதற்குக் காரணமாக சந்தர்ப்ப வாதமும், சுயநல அரசியல் ஆதாயமும் தான் இருக்கும். ஆனால், அதிமுக-வின் முஸ்லிம் வெறுப்பு என்பது (அதன் இன்றைய தலைமை காரணமாக) ஆதிக்க மனப்பான்மையிலும், இனவெறியிலும் அமைந்தது என்பதை உணரவேண்டும். (ராமர்கோயில் ஆதரவு, பொதுசிவில் சட்ட ஆதரவு, மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவை நினைவுக்கு வரவேண்டும்). சுருங்கக் கூறின் அதிமுக என்பது மென்மையான பீஜேபி. இதை விளங்கிவிட்டால் அதுவே போதுமானது. விளங்கா விட்டால், என்ன விளக்கினாலும் பலன் ஏற்படாது.

9). இந்தக் காரணங்களால், ஃபாஸிசத்திற்கு எதிர்நிலையிலிருக்கும் திமுக அணிக்கே சிந்தாமல் சிதறாமல் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்டோரும், மற்ற ஃபாஸிச எதிர்ப்பாளர்களும் வாக்களிக்க வேண்டும். அதுவே இன்றைய சூழலில் ஃபாஸிசத்தை வரவிடாமல் தடுக்கும். ஃபாசிஸத்திற்கு எதிர்ப்பாகத் தான் இந்த முடிவே தவிர, தி மு க அணிக்கு ஆதரவாக அல்ல; அல்ல.

10). கேடயக் குறிப்பாக,  முன்னரே நான் குறிப்பிட்டுள்ளதைப் போல நான் எந்த கட்சியையும், இயக்கத்தையும் சாராதவன் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன். 

-- 
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

No comments:

Post a Comment