Thursday 10 April 2014

கருத்துக் கணிப்பும் மக்கள் நினைப்பும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

         தேர்தல் என்றாலே ஆட்சிக்கு வரும் கட்சி எது,?அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சி எது?எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? எந்தவேட்பாளர் வெற்றிபெறுவார்?அல்லது எதனால் அவர் வெற்றி  பெறமாட்டார் என்று  பத்திரிகைகள், தொலைக் காட்சி ஊடகங்கள், தனியார் துப்பறியும் நிறுவனங்கள், தேர்தல் கணிப்புக்கு என்ற இயங்கும் அமைப்புகள் எல்லாம் கருத்துக் கணிப்புகள்  நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.


       எப்போதேனும் ,அபூர்வமாக ஒன்றிரண்டு கருத்து கணிப்புகள் சரியாக அமைந்துவிடுவதும் உண்டு. ஆனால், கணிப்புகள் பெரும்பாலும்  மக்கள் நினைப்பை, அவர்களது எண்ணத்தைப் பிரதிபலிப்பதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.!

       காரணம், கணிப்புகள் நடத்தும் அமைப்புகள் வாக்களர்களில் சிறு பகுதியினரை மட்டுமே அணுகுவது, தொகுதிநிலவரம், வாக்களரின் தகுதி, கட்சியின் செல்வாக்கு,வேட்பாளர்கள்  தேர்தலில் செலவிடும் முறைகேடான கள்ளப் பணம், வாக்குக்கு கடைசி நேரத்தில் தரும் லஞ்சம், குவாட்டர், கோழி பிரியாணி,தொகுதியில் உள்ள ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை ஆகிய பலவற்றை  கணிப்பாளர்கள் கருத்தில் கொள்ளாத  காரணங்களால் கணிப்புகள் பொய்த்துப் போகின்றன.

         பிறகு, தேர்தல் கணிப்புகள் பிறகு எதற்காக நடத்தப் படுகின்றன?  மக்களின் திடமற்ற,ஊசலாடும் மனநிலையைத் தங்களது ஆதரவு அக்கட்சிக்கு, வேட்பாளருக்கு ஆதரவாக திசைதிருப்பவே நடத்தப்படுகிறது.!

 பல தேர்தல்களை  சந்தித்த,பல வேட்பாளர்களுக்கு  வாக்குகளை அளித்து ஏமாந்த  வாக்காளர்கள் பலரும் "எல்லோரும் அயோக்கியர்கள் எல்லா கட்சியும் ஊழல் கட்சிகள்" என்ற விரக்தியில் இருப்பார்கள்.  அத்தகைய மக்களுக்கு இந்த தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்று மறைமுகமாக தூண்டும்  மனோதத்துவ செயலாக தேர்தலுக்கு முன்பு நடத்தப்படும்   கணிப்புகள் இருக்கின்றன !

      வாழ்க்கை நெருக்கடியில் பல்வேறு வீழ்ச்சிகளை,தோல்விகளைச் சந்திக்கும்  பொதுஜனமான வாக்காளர்கள்,  இந்த வேட்பாளர்தான் வெற்றி பெறுவார், இந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும்  என்ற தேர்தல் கணிப்புகளால் மனமாற்றம் அடையும் நிலையை கணிப்புகள் ஏற்படுத்துகின்றன.!

        மனித மனம் தோல்வியை விரும்புவதில்லை. வெற்றியை விரும்புகிறது. வெற்றி சந்தோசத்தைக் கொடுகிறது. அந்த சந்தோசத்தைத் தரும் வெற்றியை விரும்பும் மனிதன் பின்விளைவுகளைக்  கருத்தில் கொள்ளாமல், கணிப்புகள் என்ற பெயரில் திணிக்கப்படும், வெற்றிபெறுவார் என்றுகருத்துக் கணிப்புகள் கோடிட்டுக் காட்டும் மோசமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையை  ஏற்கவைக்கும் உத்தியே கணிப்புகளின் நோக்கமாகும்!

     . "எப்படியும் அவர்தான் வெற்றிபெறுவார் என்று கணிப்புகள் சொல்லுகின்றன .  நாம் எதற்கு நமது வாக்கை தோல்வி அடையும்  வேட்பாளருக்கு போடவேண்டும்?. நாம் தான் வெற்றி பெறவில்லை நாம் வாக்களிக்கும் நபராவது (வேட்பாளர் )வெற்றிபெறட்டும்"  என்ற மன நிலைக்கு வாக்காளர்களை கொண்டுசெல்ல  கணிப்புகள் பயன்படுகின்றன. .

          உள்நோக்கத்துடன் குறிப்பிட்ட கட்சிக்கு, வேட்பாளருக்கு ஆதரவாக நடத்தப்படும்  கணிப்புகள் ஆபத்தானவை. இதனால், ஜனநாயகத்திற்கு எதிரான,   மிக மோசமான,நபர்கள்,கிரிமினல்கள் கூட தேர்தலில் வெற்றிபெரும் நிலை ஏற்படுகிறது.!

        ஜோதிடர்கள் எப்படி  ஆளுக்கு ஒருவர் அவரவர் எண்ணப்படி ஜோதிடம் என்ற பெயரில் சொல்கிறார்களோ,  அதுபோன்றதுதான்   தேர்தல் கணிப்புகளும் !

           ஆகவே, மக்கள் தேர்தல் கணிப்புகளை பொதுமக்கள் அலட்சியப் படுத்தவும் கணிப்புகளுக்கு  முக்கியத்துவம் அளிப்பதையும் த்விர்க்கவும்   வேண்டும்.  நல்ல வேட்பாளர்களை ,ஜனநாயகவாதிகளை  கட்சி வித்தியாசம் இன்றியும்   சாதி, மதம் பாராமலும் தேர்வு செய்ய முன்வரவேண்டும்!

       குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவோருக்கு உதவும் கணிப்புகளை புறகணிக்க வேண்டியது வாக்களர்களின் முக்கிய கடமையாகும்.!  அவ்வாறு செய்தால்தான் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும் !  கிரிமினல்கள்,ஊழல் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியும் ! நாடும் வீடும் நலம்பெற நமது  வாக்குகளை  நல்ல முறையில் பயன்படுத்துவோம்!

No comments:

Post a Comment