Thursday 10 April 2014

மீத்தேன் வாய்வுக்கு பின்னுள்ள பயங்கரம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

            நூறுபேர் வாழ்வதற்கு, நாலு பேர் உயிர் விட்டால் தப்பிப்பில்லை என்று நியாயம் பேசுவார்கள்,ஆனால், மீத்தேன் திட்டம் இது போன்றதல்ல.. நான்கு பேர் வாழ்வதற்க்கு நூறுப் பேரை கொல்லும் திட்டம்.! .

        சாதாரணமாவே இது மாதிரியான திட்டங்களால் சுற்று சூழல் மாசுபடும், மக்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும், அதைவிட அவை மனித உயிர்களுக்கே உலை வைக்கும்!   இது மாதிரியான திட்டங்களால் எதிர் வினைகள் மிக மோசமானதாக இருக்கும்.!

           "மீத்தேன் வாயு திட்டம்"  என்ற பெயரில் கிட்டதட்ட 50 லட்சம் தமிழர்களை   விவசாயிகளை  காவிரி படுகையிலிருந்து துரத்தியடித்து விட்டு தெற்கே ஓர் தார் பாலைவனத்தை உருவாக்க முயல்கிறது மத்திய அரசு!

           நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பூமிக்கு கீழே ஏராளமான  மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உறபத்தி செய்யப் போவதாகவும் மத்திய அரசு இதற்கான ஒப்பந்தத்தை “ கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட்” என்ற நிறுவனத்திற்கு 100 ஆண்டுகளுக்கு வழங்கி இருக்கிறது.   பாகூரிலிருந்து ராஜ மன்னார்குடி வரை. சுமார் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பு வரை  திட்டம் பரந்து விரியப் போகிறது!

          இந்த நிலப்பரப்பின் கீழ் சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருக்கிறதாம்.,இந்த தொகைக்காக இவ்வளவு பெரிய நிலப்பரப்பை   நமது மத்திய அரசு பலி கொடுக்கிறது.இத்திட்டத்தின் பின்னே ஆழமான பயங்கர  நோக்கம் இருக்கிறது.!

         நம் காவிரி படுகையின் கீழே மாபெரும் நிலக்கரி சுரங்கம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்! .இந்த மீத்தேன் வாயு எல்லாம் முதல் 35 ஆண்டுகள் மட்டும்தான். அதன் பிறகு  நிலக்கரியைத்  தோண்டி எடுக்கவே  இந்த திட்டம் ! ஆனால், செய்திகளில் “மீத்தேன் வாயு திட்டம்” என்றுதான் முன்னிலை படுத்துகிறார்கள்!  ஏன்என்றால் முதலில் மீத்தேன் வாயுவை வெளியேற்றினால்தான்  நிலக்கரியை தோண்டி எடுக்க முடியும் இல்லையெனில் தீ விபத்து ஏற்படும்!  அதற்காக மீத்தேனை வெளியே எடுக்க வேண்டுமானால் முதலில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்ற வேண்டும்!

          நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால் பின் மெல்ல மெல்ல அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு, பூமியின் கீழ் ரசாயன கழிவுகள் செலுத்தப்பட்டு, பின்  பூமியின் மேலே  நிலம் நஞ்சாகிவிடும்!இவையெல்லாம்  35 ஆண்டுகளுக்குள் நடக்ககூடும்!

          அப்புறம்  என்ன? அந்த பகுதி மக்கள் வேறு வழியில்லாமல், விவசாயம் செய்ய முடியாமல், நிலங்களை பாதி விலைக்கு விற்றுவிட்டு அந்த பகுதியை விட்டே வெளியேறி விடுவார்கள்  அப்புறமென்ன? எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிலக்கரி தோண்ட ஆரம்பித்து விடுவார்கள்!  என்ன  ஒரு மாபாதக திட்டம் இது! .

         அமெரிக்கா, கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  மீத்தேன் எடுக்கிறார்கள் என்றால், மக்கள் அடர்த்தி குறைந்த பகுதியிலும,மக்கள் அதிகம் வசிக்காத நிலப்பரப்பிலும்  இந்த திட்டத்தை செயல் படுத்துகிறார்கள்!

          ஆனால், இங்கே காவிரி டெல்டாவில் ஊர்களும் வயல்களும் இனைந்தே இருக்கிறது. .ஏற்கனவே திருவாரூர் பகுதியில் குழாய்கள் அனகொண்டா போல் ஊர்முழுவதும் புதைக்கப்பட்டு இருகிறது!

          நெற்களஞ்சியமாக காணப்பட்ட விளைநிலங்களை விலை நிலங்களாக மாற்றுவதோடு   பாலை வனமாகவும் மாற்ற கிளம்பி உள்ளார்கள் ! இந்த பயங்கரம்  நம் மாவட்டதில் ,தஞ்சையில் நடக்கிறது    இனியும் நினைக்காதீர்கள்.!

         தமிழனின் வீரம் ஜல்லிக்கட்டிலும், இளவட்டக்கல்லிலும் மட்டும் இல்லை...எங்கெல்லாம் தமிழனுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் தமிழனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் வீரம் தான்!

          நம் விவசாய நிலங்களை காக்கவேண்டிய மகத்தான பொறுப்பு இன்று நமக்கு இருக்கிறது! நம் வருங்கால சந்ததியினருக்கு சொத்துக்களை சேர்த்து வைப்பதை விட இயற்கை வளங்களையும் வளமான வாழ்வையும் ஏற்படுத்தி தருவதே நம் கடமை.!

          நம்   சந்ததியினர் சாப்பிடப் போகும் தட்டில்.. நாம் அரிசியை தரப் போகிறோமா? அல்லது கரியை தரப் போகிறோமா என முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டு உள்ளது. நமது மண்ணைக் காக்க,தமிழர்களைக் காக்க, விவசாயிகளைக் காக்க, நிலத்தடி நீரைக்காக்க, இயற்கை வளத்தைக்காக்க ,  உணவுதேவையைக் கருதி, எதிர்வரும் சந்ததிகளின் நலத்தைகருதி மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்போம் !
(நன்றி; பனிமலர் வைத்தி )

No comments:

Post a Comment