Monday 28 October 2019

ஆம்! இனி இங்கு இப்படித்தான். அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஜாக்கிரதை

நேற்றுதான் ஹரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் கூட்டணி முடிவானது. அதற்குள் இன்று திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜ.ஜ.க தலைவர் துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா சிறை நிர்வாகத்தால் இரண்டு வாரங்கள் விடுப்பில் வெளியே அனுப்பப்படுகிறார். இவர் தனது தந்தை ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்தப்போது ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில் தந்தையோடு சிறையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேப்போல 2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்த சிக்கிம் முதல்வரும், பி.ஜே.பி கூட்டணிக் கட்சித் தலைவருமான திரு.பிரேம் சிங் தமங் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அடுத்த 6ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என்பது சட்டம். ஆனால் திடீரென கடந்த மாதம் 6ஆண்டுகளாக இருந்தத் தடையை 1ஆண்டாக தேர்தல் ஆணையம் குறைத்ததையடுத்து அவர் தேர்தலில் நின்று தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டு, அதன்படி நேற்றைய முன்தினம் அவர் தேர்தலில் ஜெயித்தும்விட்டார்.

ஊழலை ஒழிக்க வந்த 'புனிதர்' நரேந்திர மோடி ஊழல்வாதிகளை தண்டிக்கும் விதம் இதுதான்.

'இவ்வளவு பச்சையாக சட்டத்தை வளைத்தால் மக்கள் அதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுக்கூடவா மோடிக்கு தெரியாது?' என்று உங்களுக்குத் தோன்றினால், உங்களுக்கு இங்கு தொடங்கியுள்ள பாசிசத்தின் தீவிரம் இன்னும் முழுமையாக விளங்கவில்லை என்றுப் பொருள். காரணம், அனைவருக்கும் இது தெரியவேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.

"இனி இங்கு இப்படித்தான். நாங்கள் வைத்ததுதான் சட்டம். ஜாக்கிரதை!" என்று மோடியும், அமித் ஷாவும் சொல்லாமல் சொல்கிறார்கள்.

ஆம்! இனி இங்கு இப்படித்தான். அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஜாக்கிரதை!

-Ganesh Babu

No comments:

Post a Comment