Monday 14 February 2011

குடும்ப உறவு

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.
துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.
நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
ஈமானுடன் சம்பந்தப்பட்டது:
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.
அல்லாஹ்வுடன் தொடர்பு :
ஏற்கனவே இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவு என்று கூறினோம். இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.
அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி
என்ற அறிவிப்பின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக்கப் படுவதையும் நாம் காணலாம்.
இரத்த உறவு அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
இந்த அறிவிப்பும் குடும்ப உறவைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, இதற்கு மாறாகச் செயல் படுவோரைக் கண்டிக்கவும் செய்வது கவனிக்கத் தக்கதாகும்.
சுவனத்தில் நுழைவிக்கும்:
இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
சுவனம் செல்ல விரும்புபவர்கள் மேற்குறித்த நோக்கில் செயல்பட்டு குடும்ப உறவைப்பேண முன்வர வேண்டும்.
இரண விஸ்தீரனம் :
இரத்த உறவைப் பேணுவதால், மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்களுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.
யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
எதுவரை சேர்ந்து நடப்பது :
சிலர் எவ்வாறுதான் நல்ல முறையில் நடந்து கொண்டாலும், குறைகண்டு கொண்டே இருப்பர், குத்திப் பேசிக்கொண்டே இருப்பர், இப்பகைவர்களுடனும் இணைந்து நடப்பதே சரியான இரத்த உறவைப் பேணும் முறையாகும்.
தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி), ஆதாரம் : புகாரி
இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.
எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர் களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும். இதுவே, உண்மை யான இரத்த பந்தமாகும்.
காஃபிரான உறவு :
எமக்கு காஃபிரான இரத்த உறவு இருந்தாலும் அவர்களுக்குரிய அந்தஸ்த்தைக் கொடுக்க நாம் தயங்கக் கூடாது. இதில் இஸ்லாம் எவ்வளவு தூரம் விசாலமாகச் சிந்திக்கின்றது என்பதைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது.
நீங்கள் நிச்சயமாக எகிப்தைக் கைப்பற்றுவீர்கள் அப்போது அவர்களுடன் மிக இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும் திருமண உறவும் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
இஸ்மாயில்(அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா அவர்கள் கிப்தி இனத்தவராவார். அவ்வாறே நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிமின் தாய் மரியதுல் கிப்தியாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். இதனையே நபி(ஸல்) அவர்கள் மேற்குறித்த நபிமொழியில் குறிப்பிட்டார்கள். தனக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹாஜரா அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எமது உடன் பிறப்புக்கள், எமது பெற்றோரின் உடன் பிறப்புக்கள், அவர்களுடைய குழந்தைகளுடன் நாம் எவ்வளவு இங்கிதமாக நடந்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் இதனைக் கூறும் போது அந்த கிப்தி இனத்தவர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
எனவே, காபிர்களாக இருந்தால் கூட இரத்த உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் வழங்கத் தவறக் கூடாது.
இஸ்லாத்திற்கு எதிராக இரத்த உறவு:
இரத்த உறவு இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ந்து வருமென்றால் அப்போது இரத்த உறவை விட கொள்கை உறவே முதன்மை பெறும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் எதிராகச் செயல்படுவோர் மீது உண்மையான பாசத்தையும் நேசத்தையும் சொரிய முடியாது. இதனைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும், நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும், தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கின்றான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்; அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். (59:22)
இந்த வசனத்தின் படி நபித் தோழர்கள் தமது தந்தை, சகோதரர்கள் நெருங்கிய உறவினர்கள் என்ற பாகுபாடின்றி போர்க் களங்களில் எதிர்த் தரப்பில்; இருந்த பலரைக் கொன்றுள்ளனர். இரத்த உறவைக் காரணம் காட்டி சத்தியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு உதவ முடியாது.
அல்லாஹ்வை மிஞ்சி இரத்த உறவு ஓங்கலாகாது
இரத்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், அது எல்லை மீறிச் சென்று விடக் கூடாது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும்விட பெற்றோரையோ, மற்ற உறவினர்களையோ ஒரு முஃமின் நேசிக்க முடியாது. இதனைப் பின்வரும் வசனம் இப்படி விபரிக்கின்றது.
“(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத் தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம்(எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பாத்து இருங்கள்- அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை”. (9:24)
நபி (ஸல்) அவர்களும், “உங்களில் எவருக்கும் நான் அவரது தாய், தந்தை பிள்ளைகள் மீது மனித சமூகத்தை விடவும் விருப்பத்திற்குரியவனாக ஆகாதவரையில் நீங்கள் ஈமான் கொண்டவர்களாக முடியாது. (ஆதாரம் :முஸ்லிம்) என்ற நபிமொழி மூலம் நவின்றுள்ளார்கள். எனவே, பெற்றோர்கள் மீதோ, குடும்பத்தினர் மீதோ பாசம் வைக்கும் போது அந்தப் பாசம் எல்லை மீறிச் சென்று விடாவண்ணம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
எனவே, குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெறுவதுடன் குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான்அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி), (ஆதாரம்: முஸ்லிம், புகாரி) என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு அப்பாற்பட்ட கூட்டத்தில் இணைந்து கொள்வோமாக!
நன்றி- ரீட் இஸ்லாம்.நெட்

விக்கிலீக்ஸ்:ஈராக்கில் தலையிடாதீர்கள் என அமெரிக்காவிடம் ஹுஸ்னி முபாரக் தெரிவித்தார்

ஈராக் விவகாரத்தில் தலையிடாதீர்கள் என ஹுஸ்னி முபாரக் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் தலையிட்டால் அங்கிருந்து அமெரிக்காவால் தப்பிக்க வியலாது என ஹுஸ்னி முபாரக் தெரிவித்ததாக அமெரிக்க தூதரக செய்திகளை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
சதாம் ஹுசைனை பதவியிலிருந்து இறக்காதீர்கள் எனவும் முபாரக் தெரிவித்திருந்தார். முன்னாள் அமெரிக்க துணை அதிபர் டிக்செனியிடம் மூன்று அல்லது நான்கு தடவை முபாரக் இதனை தெரிவித்திருந்தார். ஆனால், அமெரிக்க வட்டாரங்கள் முபாரக்கின் எச்சரிக்கையை நிராகரித்தன.
இச்செய்தியை விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி டெய்லி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு கெய்ரோவில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அளித்த விருந்து நிகழ்ச்சியில் முபாரக் தனது கருத்தை தெரிவித்துள்ளார் என டெய்லி டெலிகிராஃப் கூறுகிறது.
ஜார்ஜ் புஷ் சீனியர் எனது பேச்சைக் கேட்பார், ஆனால் அவரது மகனோ அவ்வாறல்ல என முபாரக் தெரிவித்துள்ளார். 2009 ஜனவரி 14-ஆம் தேதி அமெரிக்க தூதரக ஆவணங்களை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் இதனை வெளியிட்டுள்ளது.
மாத்யமம்

Wednesday 9 February 2011

அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட்! கிரிகெட்டை ஒழிப்பது நாட்டு வளர்ச்சிக்கு பலம்!!

நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான் குர்ஆன்ஒருமுறை மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா கடித்த எச்சில் ஆப்பிளை ரசிகர் ஒருவர் 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் விளையாட்டிலும் அண்மையில் இதுபோன்றதொரு ஏலம் நடந்திருக்கிறது. ஏலம் எடுக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தின்று போட்ட எச்சில் இலைகளையல்ல.
 
மாறாக, கிரிக்கெட் வீரர்களையே ஏலம் எடுத்திருக்கிறார்கள், இந்தியப் பெருமுதலாளிகள்.
 
சில்க் சுமிதாவின் எச்சில் ஆப்பிளை ஏலத்துக்கு எடுத்தவரின் செயலை, பைத்தியக்காரத்தனம் என்று எவரும் எளிதில் கூறிவிட முடியும். ஆனால், கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கும் முதலாளிகள் நிச்சயம் பைத்தியக்காரர்கள் அல்ல. ''இது ஒர் இலாபம் தரும் வியாபாரம்'' என்று பேட்டியளிக்கிறார், கொல்கத்தா அணியை ஏலம் எடுத்திருக்கும் இந்தி நடிகர் ஷாருக்கான்.
 
ஏப்ரல், ஜூன் மாதங்களில் இருபதுக்கு இருபது (20/20) என்ற பெயரில் இந்தியன் பிரீமியர் லீக் என்ற அமைப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்தி முடித்தது. இந்தப் போட்டிகளில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி. மொஹாலி, ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு என இந்தியாவின் எட்டு மாநில நகரங்களின் பெயரில் அணிகள் மோதி முடித்தன. இந்த அணிகளை யார் வேண்டுமானாலும் ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என 200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி அறிக்கை (டெண்டர்) வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம். இதன்படி சாராய அதிபர் விஜய் மல்லையா, திரு(ட்டு)பாய் அம்பானி, ஜி.எம்.ஆர். எனும் வீட்டுமனை கொள்ளைக்கார நிறுவனம், டெக்கான் கிரானிக்கிள் எனும் ஆங்கில நாளேடு, பெருமுதலாளி நெஸ் வாடியா, இந்தி சினிமா நடிகர் ஷாரூக்கான், கவர்ச்சி நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் பல நூறு கோடிகளுக்கு ஒவ்வொரு அணியையும் ஏலம் எடுத்துள்ளனர்.
 
இந்த அணிகள் இந்தியாவின் மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களின் பெயர்களில் அமைந்திருந்தாலும், அதில் விளையாடுபவர்களெல்லாம் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், இதில் பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அல்ல. ஒவ்வொரு அணியிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறுவார்கள். எஞ்சியிருப்பவர்களில், எந்த மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இடம் பெறுவார்கள். இப்படி உள்நாட்டு-வெளிநாட்டு வீரர்களைக் கலந்து வீரிய ஒட்டுரகமாக அணிகள் அமைந்திருக்கும்.
 
அணிகளை ஏலத்துக்கு எடுத்ததைப் போலவே, அதற்கான ஆட்டக்காரர்களையும் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இதன்படி, சென்னை அணியில் விளையாடவுள்ள மகேந்திர சிங் டோனியை 6 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்திருக்கிறார், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதலாளி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர் சைமண்ட்சை 5.4 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்காக ஏலம் எடுத்திருக்கிறது, டெக்கான் கிரானிக்கிள் நாளேடு. இதேபோல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை இந்த ஏலமுறைக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். இவர்களில் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்து, தாங்கள் ஏலம் எடுத்துள்ள அணிகளில் அவர்களை ஆட வைக்க முதலாளிகளால் முடியும்.
 
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஏலம் போட்டு முதலாளிகளிடம் விற்றதன் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டியிருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். செய்தி ஊடகங்களால் இந்தத் தேசத்தின் நாயகர்களாகச் சித்தரிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், தாங்கள் அடிமைகளைப் போல ஏலம் போட்டு விற்கப்பட்டதற்கு அவமானப்படவில்லை. இப்படி தங்களுக்கு ''ரேட்'' பேசப்பட்டிருப்பதைக் கண்டு பூரித்துப் போயுள்ளார்கள். ''இந்த ஏலத்தின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் குறுகிய காலத்தில் அதிக இலாபமீட்ட முடியும்'' என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார், நட்சத்திர ஆட்டக்காரரான யுவராஜ்சிங். விலை போகாத சில 'வீரர்கள்' மட்டும், ''எனக்கு இது தகுந்த ரேட் இல்லை'' என்று விலைமகளிர் போல பேட்டியளித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்பட்ட கேவலத்தைக் கண்டு வெறுப்பை உமிழாமல், இந்த ஆட்டக்காரருக்கு இவ்வளவு தொகை கொடுத்திருக்கலாம், இது குறைவானது, கூடுதலானது என்றெல்லாம் செய்தி ஊடகங்கள் பரபரப்பாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. டோனிக்கு ஆறு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதைக் கண்டு தேசியப் பெருமிதம் கொள்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கைக் காட்டிலும் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பதை சந்தைப் பொருளாதாரத்தின் விளைவு என்று அங்கலாய்த்து, இந்தப் பட்டிமன்றத்தில் 'தேச பக்தி'யோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது, 'மார்க்சிஸ்டு'களின் புரட்சிகர ''தீக்கதிர்'' நாளேடு.
 
ஆங்கிலேய பிரபுக்குலத்தின் மேட்டுக்குடி சீமான்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், இன்று பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், தரகுப் பெருமுதலாளிகள், கருப்புப் பணச் சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ந்து விட்டது. சினிமாவுக்கு அடுத்து கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவை விட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் வெவ்வேறு நாடுகளின் ஊழல் மிக்க வாரியங்கள் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல லட்ச ரூபாய் சம்பளமாகப் பெறுவதோடு, கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை மட்டுமின்றி, கிரிக்கெட் சூதாடிகளுடனும் தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள்.
 
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பால் உல்மரின் கொலைச் சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டின் இருண்ட அசிங்கமான பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டியது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணிகளின் வீரர்கள், வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்ட விவகாரம் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. இருப்பினும் உள்நாட்டு-வெளிநாட்டு முதலாளிகளால் பல்லாயிரம் கோடிகள் வாரியிறைக்கப்பட்டு இந்தக் கிரிக்கெட் சூதாட்டம் வெறியோடு நடத்தப்படுகிறது. ஆங்கிலேய காலனிய நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அவமான அடிமைச் சின்னமாக கிரிக்கெட் விளையாட்டு தொடர்கிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அமெரிக்க-ஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போலவே கிரிக்கெட் மோகம் 'தேசபக்தி'யாக வளர்க்கப்படுகிறது.
 
கிரிக்கெட்டையே தனித்தொழிலாகக் கொண்ட ஆட்டக்காரர்களும், கிரிக்கெட்டை பந்தயம்-சூதாட்டமாகவும், வியாபாரம்-விளம்பரமாகவும் நடத்தும் கருப்புப் பணக் கும்பலும் சமுதாயத்தின் மிகப் பெரிய ஒட்டுண்ணிகளாக வளர்ந்து விட்டதை, தற்போதைய ஏல விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது. குதிரைப் பந்தயம், லாட்டரி, ஆபாசக் களி வெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப் போலவே மிகப் பெரிய சமூகக் கேடான கிரிக்கெட் விளையாட்டும் ஒழிக்கப்பட வேண்டும்.

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்ட சகோதரன் தன்னுடைய பொன்னான நேரத்தை இதில் போக்குவது வேதனையான ஒன்று. கிரிக்கெட் எப்பொழுது சூதாடிகளின் கூடாரமாக மாறியதோ அன்றே ஒரு முஸ்லிம் அதை விட்டு விலகிவிட வேண்டும். காரணம், இஸ்லாம் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளது.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.  குர்ஆன்  5:90
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?  குர்ஆன்  5:91

 இந்தக் கட்டுரையைப் படித்த பின்னராவது முஸ்லிம் இளைஞர்கள் இதிலிருந்து விடுபடவேண்டும்.

 


-- M.S. Abdul Hameed  

Sunday 6 February 2011

பரமக்குடி ஜவ்வாதுப் புலவர் மன்றம் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் paramakudi eye test

பரமக்குடி ஜவ்வாதுப் புலவர் மன்றம் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்
பரமக்குடி : பரமக்குடி ஜவ்வாது புலவர் மன்றம் மற்றும் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமினை 29.01.2011 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லிம் திருமண மஹாலில் நடத்தியது.
கிழப்பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஈ இறைவசனங்களை ஓதி இலவச கண் பரிசோதனை முகாமினை துவங்கி வைத்தார்.
கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.இ.எம். ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ஆர். ராம்பிரபு, காவல்துறை ஆய்வாளர் பி. சிவக்குமார், நகர்மன்றத்தலைவர் எம். கீர்த்திகா முனியசாமி, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உ. திசைவீரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர் எம். புரோஸ்கான் முன்னிலை வகித்தார். ஜவ்வாது புலவர் மன்ற தலைவர் பி. அக்பர் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் டி. முஹம்மது பரக்கத் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வினை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கவிஞர் கே.ஏ. ஹிதாயத்துல்லா தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை உதவிச் செயலாளர் எஸ். சகுபர் சாதிக், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது, தாளாளர்கள் பி.எம்.எஸ். சிகாபுதீன், சி.ஏ. கமருல் ஜமாலுதீன், கல்விக்குழு உறுப்பினர்கள் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப், பி.எம்.எஸ். அப்துல் ரஹீம், எஸ்.என்.ஏ. அன்வர்தீன், இ. முஹம்மது உமர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை எம். உதுமான் அலி, பி. அக்பர் அலி, எம். செய்யது அலி, ஜே. ஹிதாயத்துல்லா, கே. முகம்மது சபீர், கே. அஸ்கர் அலி, ஏ. செய்யது அன்சாரி, எஸ். அக்பர் அலி, ஏ. அபுல் ஹஸன், ஏ. அஹமது சுபையர், எம். ஜாபர் அலி, ஏ.டபிள்யூ. நூருல் அமீன், ஏ. சாதிக் நஸ்ரத்தான், எஸ்.பி. சாகுல் ஹமீது, ஏ. செய்யது நல்ல இபுறாஹிம், ஜே.முகம்மது பைசல் உள்ளிட்ட ஜவ்வாது புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கண் பரிசோதனை முகாமில் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.

Tuesday 1 February 2011

நீரிழிவு நோய்(DIABETES) அறிந்துகொள்வோம்...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீரிழிவு நோய்(DIABETES) அறிந்துகொள்வோம்...

 
நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreass) என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது.
 
இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது.இது தான் சர்க்கரை நோய், நீரிழிவு நோய், Diabetes என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
 
இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.
 
நீரிழிவின் வகைகள்
  • டைப் 1 டயாபிடிஸ் (Type 1 diabetes)
  • டைப் 2 டாயாபிடிஸ் (Type 2 diabetes)
  • ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)
 
டைப் I நீரழிவு நோய்
இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது.
 
நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது.
 
இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
 
டைப் I நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்
 
  • பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
  • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
  • இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல
  • இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
  • உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.
 
டைப் II நீரழிவு நோய்
 
இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள்.
 
தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.
இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம்.
 
இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.

டைப் II நீரழிவு நோயின் குணாதிசியங்கள்
 
  • பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்
  • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்
  • பொதுவாக இது பரம்பரை நோய்
  • பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.
 
இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
 
ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்
 
கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம்.
 
பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
 
ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 
உணவு:
 
உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
 
உடற்பயிற்சி:
 
உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது. முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
 
சிகிச்சை:
 
இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர் ஆலோசனைப் படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்தல், மருந்துக்களை உட்கொள்தல் வேண்டும்.
 
கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல் போன்றவற்றை சுய கட்டுப்பாடுடன்கடைப்பிடித்தால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம்.
 
சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?
 
தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.
 
சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம். காய வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள்.
 
காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியை போட்டு கலக்கி, தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி விடலாம்.
 
வெந்தயத்தை நன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை3 தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல் ஆக்கி காலை, இரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும்.
 
இதனுடன் தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம் சாப்பிட்டு வந்து பின் மாத்திரை களை நிறுத்திவிட்டு வந்தயப் பொடியை உட்கொண்டும்,  நீரிழிவு நோய்க்கான யோகாசனங்களையும் செய்து வர நீரிழிவு நோய் கட்டுப்படு்ம்.
 
வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதால் பசி மந்தப்படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள். பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.
 
இன்சுலினுக்கு இணையான பாகற்காய் பாகற்காயில், இன்சுலின்போன்ற ஒரு பொருள்சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினைகுறைத்துக் கொள்ளலாம்.
வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் – 3 நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர, நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
 
ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது
 
சாப்பிட வேண்டிய காய்கறிகள் : கத்தரீக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்த வரங்காய், வெண் பூசணி, வெள்ளை முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், பலாக்காய், பாகற்காய், வெங்காயம், காலிபி;ளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய்போன்றவை.
 
முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.
 
சாப்பிடக்கூடாத காய்கறிகள்:
 
வாழைக்காய், உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரைப் பூசணி, கிழங்கு வகைகள், பீன்ஸ்..ஃசர்க்கரை நோயாளிகள்,பச்சைக்காய்கறிகளையே முழுவதும் உண்டால், மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
 
சாப்பிட வேண்டிய பழங்கள் :
 
ஆப்பிள், வாழை,ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரீப்பழம், கொய்யாப்பழம்.
சாப்பிடக்கூடாத பழங்கள் :
 
பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரீய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரீய ஆப்பிள், பெரீய மாம்பழம், பெரீய கொய்யாப்பழம், சப்போட்டா.
 
அருந்த வேண்டிய பானங்கள் :
 
சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா. .
 
சாப்பிடக்கூடாத பானங்கள் :
 
சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.
 
இன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தவேண்டாம்.
 
வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. இதனால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பச்சையாக வெங்காயத்தை சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரீல் பச்சடியாகதயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகுகோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.
 
நன்றி:- சாதிக் அலிகுளச்சல் 

"எங்கள் இறைவா!  என்னையும்என் பெற்றோர்களையும்முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)

இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.
-------------------------------------------------------------------