Monday 14 December 2015

சமூக பொறுப்புணர்வு தேவை வைரமுத்து!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நடிகர் சிம்பு-அனிருத் ஜோடியின் பீப் சாங் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர்களுக்கு சமூக பொறுப்புணர்வு தேவை என்று கூறியுள்ளார்.
பெண்களை இழிவுப்படுத்தியும்,ஆபாச வார்த்தைகளைக் கொண்டும் பாடல் பாடி அதை இணையதளங்களில் பரப்பியதாக  நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது புகார் எழுந்துள்ளது. இது சமூக வலைத் தளங்களிலும்,ஊடங்களிலும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில்,இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த பாடலின் வரிகளை கண்டித்து இருவர் மீது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சிம்பு-அனிருத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரம் பெரிதாகி பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்தப் பாடல் எழுப்பியுள்ள சர்ச்சை குறித்து கோவையில் கவிஞர் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ’நான் அந்த பாடலை இதுவரை கேட்கவில்லை. பாடலை கேட்காத நிலையில் என்னால் எந்தவொரு விமர்சனமும் செய்யமுடியாது.’ என்றார்.
இருப்பினும் எழுத்தாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்புணர்வு தேவை என்று வலியுறுத்திய வைரமுத்து, அவர்கள் தங்களுக்கென்று சில எல்லைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், தமிழ் சினிமாவில் கருத்தாழமுள்ள பாடல்கள் காலப்போக்கில் குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment